2 Sept 2024

மட்டக்களப்பு கன்னன்குடா மகா வித்தியாலயத்தின் 135வது பாடசாலை தின நடைபவனி.

SHARE

மட்டக்களப்பு கன்னன்குடா மகா வித்தியாலயத்தின் 135வது பாடசாலை தின நடைபவனி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதனை படைத்து வரும் கன்னன்குடா மகா வித்தியாலயத்தின் 135 வது பாடசாலை தினத்தை முன்னிட்டு நடைபவனி ஓன்று நேற்று காலை நடைபெற்றது. 

பாடசாலையின் அதிபர் ரீ.கரிகாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பாடசாலை வளாகத்தில் வைத்து பாடசாலை தினத்தை நினைவு கூறும் வகையில் கேக் வெட்டப்பட்டு அதனைத் தொடர்ந்து நடை பவனியானது ஆரம்பமாகியது. 

காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகிய நடைபவனியில் பாடசாலை பாண்டு வாத்திய குழுவின் அணிவகுப்புடன் பாடசாலை மாணவர்கள் பழைய மாணவர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

இந்நடைபவனியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்மந்தமாகவும் சுற்றாடல் பாதுகாப்பு போன்றவற்றை பற்றிய மேலும் பல விழிப்புணர்வூட்டும் பதாதைகள் மாணவர்களால் கொண்டு செல்லப்பட்டதுடன், கலை கலாசார நிகழ்வுகளுடனும் மாணவர்களின் ஆடல் பாடல்களுடன் இடம்பெற்ற இந் நடைபவனியில் விழிப்புணர்வூட்டும் வகையிலான வாகன பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

பெருமளவான மாணவர்களுடன் நடைபெற்ற இந் நடைபவனியானது பாடசாலையிலிருந்து கன்னன்குடா ஊடாக கரயாக்கன் தீவையடைந்து அங்கிருந்து தாண்டியடி ஊடாக மீண்டும் பாடசாலை வளாகத்தை வந்தடைந்தது. 

பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக இடம் பெற்ற பாடசாலை தின நடைபவனியில் பாடசாலைக்கு காணி நன்கொடை செய்த நன்கொடையாளர்களின் உருவப்படங்கள் காட்சிப்படுத்த்தப்பட்டிருந்ததுடன், பவனியில் அதிகளவிலான பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் என பெருமளவிலானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பாடசாலை மைதானத்தில் இடம் பெற்ற பிரதான நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வின் போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி என்பன ஏற்றப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது. 

அதனைத் தொடர்ந்து பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் பாடசாலை சமூகத்தினரால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 

அத்தோடு விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்கும் இதன் போது அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி உள்ளிட்ட, வலயக் கல்லி அலுவலகத்தின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.






















 












SHARE

Author: verified_user

0 Comments: