தட்டிக்கொடுப்பவர்களே நல்ல தலைவர்களாக இருப்பர் - ஞா.சிறிநேசன். தட்டிக்கொடுப்பவர்கள்தான் நல்ல தலைவர்களாக சமூகத்தில் இருப்பர் மாறாக தட்டிக்கெடுப்பவர்கள் நல்தலைவர்களாக இருக்கமாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (30) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக்குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் பாராளுமன்ற உறுப்பினர் உரையாற்றுகையில்,
தட்டிக்கொடுக்கும் மனப்பாங்குள்ளவர்கள் சமூகத்தில் உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு தட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு உள்ளவர்களே நல் தலைவர்களாக இருப்பர். இவர்களிடத்தில்தான் பக்கச்சார்பின்றிய மனநிலையும், பாராபட்சமின்றிய நடத்தையும் காணப்படும். மாறாக தட்டிக்கெடுக்கும் மனப்பாங்கு உள்ளவர்களிடத்தில் பழிவாங்கும் எண்ணமே மேலோங்கியிருக்கும். மேலும் இவர்களிடத்தில், வேண்டியவர்களை உயர்த்திச் செல்வதும் காணப்படும். இவ்வாறான பண்புகள் தரக்குறைவானவையே.
தட்டிக்கொடுக்கும் மனப்பாங்கு இல்லாதுவிட்டால், பாடசாலையை மேற்பார்வை செய்யும் யோக்கிதையையும் இழந்துவிடுவோம். மகிழடித்தீவு சரஸ்வதி மகா வித்தியாலயம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் சாதனைபுரியும் பாடசாலையாகவுள்ளது. இப்பாடசாலையின் பரிசளிப்பு விழாவில் கல்விசார் அதிகாரிகளும் யாருமே கலந்துகொள்ளாமை வேதனைக்குரிய விடயமாகும். சிறந்த பாடசாலைகளில் நிகழ்வுகள் என்றால் அழைக்காமலே அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டும்.
பாடசாலைகளால் உருவாக்கப்படும் மாணவர்கள் அனைவரும் நற்சிந்தனை கொண்ட மாணவர்களாக உருவாக வேண்டும். என்றார்.
0 Comments:
Post a Comment