அபிவிருத்தியை நோக்கிய தூரநோக்கில் இளைஞர் யுவதிகளின் ஈடுபாட்டை அதிகரிக்கும் தகவல் பரிமாற்ற பயிற்சி நெறி.
அபிவிருத்தியை நோக்கிய தூரநோக்கில் தகவல் பரிமாற்றத்தினூடாக இளைஞர் யுவதிகளின் ஈடுபாட்டை மேம்படுத்தும் பயிற்சி நெறி விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் (Viluthu
Centre for Human Resource Development) ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் சமூக இணைப்பு அலுவலர் வி. தீபாகர் தலைமையில் முல்லைத்தீவு வள்ளிபுனம் பொதுநோக்கு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை 30.06.2019 இடம்பெற்ற இப்பயிற்சி நெறியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, உடையார்கட்டு, வள்ளிபுனம், மாணிக்கபுரம், தேவிபுரம், கைவேலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 30 இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தார்கள்.
பயனுள்ள தகவல் பரிமாற்றத்தின்மூலம் பிரதேசத்திலுள்ள பிரச்சினைகளை ஆழமாக ஆராய்ந்து அவற்றை வெளிக்கொண்டு வந்து உரிய தரப்பினருக்குக் கிட்டச் செய்வதனூடாக தீர்வுகளைக் காண்பதும், உள்ளுர் மக்களின் அபிவிருத்தில் இளைஞர் யுவதிகளின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்வதே இப்பயிற்சி நெயிறின் நோக்கமாகும் என விழுது நிறுவனம் தெரிவித்துள்ளது.
நவீன தொடர்பாடல் வசதிகளை குறிப்பாக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தேவைகளையும் காத்திரமான முறையில் முன்வைத்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்தல்.
பிரதேச அபிவிருத்தியை மேற்கொள்ளத் தேவையான மனப்பாங்குகளையும் பெறுமானங்களையும் அர்ப்பணிப்புக்களையும் இளைஞர் யுவதிகள் வளர்த்துக் கொள்ளல் உள்ளிட்ட விடயங்களில் பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டன.
தகவல் தொழினுட்பத்தினூடாக பல்வேறு அபிவிருத்திகளைத் துரிதமாக மேற்கொள்ள முடியும் என்பது சாத்தியமாகியுள்ள இக்காலகட்டத்தில் யுத்தத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் தீர்க்கப்படாத, கண்டுகொள்ளப்படாத ஏராளமான பிரச்சினைகள் இன்னமும் இருப்பதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலம் கடந்துள்ள போதும் இழப்பீடுகள் இன்னமும் முறைப்படி கிடைக்காமை, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகள், வீதிகள் புனரமைக்கப்படாமை, அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனை, சட்டவிரோத காடழிப்பு, மணல் அகழ்வு உள்ளிட்ட இன்னும் பல பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.
இப்பயிற்சி நெறியில் சமூக ஆய்வாளரும் எழுத்தாளருமான மட்டக்களப்பைச் சேர்ந்த ஏ.எச்.ஏ. ஹ{ஸைன் வளவாளராகக் கலந்து கொண்டார்.
0 Comments:
Post a Comment