மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலை – பிள்ளையாரடி எனுமிடத்தில் செவ்வயாக்கிழமை 19.12.2017 மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த இளைஞன் சற்று நேரத்தில் மரணமடைந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கதுறுவெலயிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த பஸ்ஸின் அடியில் மேற்படி இளைஞன் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டதில் இந்த விபத்துச் சம்பவித்தது.
மட்டக்களப்பு கூழாவடிப் பகுதியைச் சேர்ந்த யாதவன் மஹரிஷ (வயது 25) என்ற இளைஞனே பலியாகியுள்ளார்.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவரை உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட போதும் சற்று நேரத்தில் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடைபெறும் போது மழை பெய்து கொண்டிருந்தது, பிள்ளையாரடி எனும் வாவிக்கரை வளைவில் வீதி வழுக்கியதில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியுள்ளதாக சம்பவ இடத்தில் இடம்பெற்ற ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இச்சம்பவம்பற்றி மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment