6 Dec 2017

SHARE
வேலையில்லாப் பட்டதாரிகள் என்ற அடைமொழியோடு பட்டதாரிகள் வேலையின்றி இருக்கக் கூடாதுமுன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத்

வேலையில்லாப் பட்டதாரிகள் என்ற அடைமொழியோடு பட்டதாரிகள் வேலையின்றி இருக்கக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த ஆசிரியர் தேர்வுப் பொதுப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து புறக்கணிக்கப்பட்டதாகக் கூறும்  பட்டதாரிகள் முன்னாள் முதலமைச்சரை அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை 03.12.2017 சந்தித்து தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இதன்போது பட்டதாரிகளின் குறைகளைக் கேட்டறிந்து கொண்ட முன்னாள் முதலமைச்சர் மேலும் கூறியதாவது,
பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கி அவர்களது மனித வளங்களைப் பயன்படுத்துவதில் கிழக்கு மாகாண சபை எனது தலைமையிலான ஆட்சிக் காலத்தில் முன்னுரிமை அளித்திருந்தது.
அதனடிப்படையிலேயே கிழக்கு மகாணாத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் ஆசிரியர் வெற்றிடத் தகவல்கள் 6 மாத கால முயற்சியில் திரட்டப்பட்டன.

2016ஆம் ஆண்டு ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் வெற்றிடங்கள் வலயக் கல்விப் பணிமனையினூடாக அவை உறுதிப்படுத்தப்பட்டு மாகாணக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சு ஆகியவற்றின் உறுதிப்படுத்தலுடன்  4927 வெற்றிடங்கள் உள்ளதை ஆதாரபூர்வமாகத் திரட்டி அதனை பிரதம மந்திரியிடம் சமர்ப்பித்திருந்தேன்.

அதற்கமைவாக பிரதம மந்திரி முதற்கட்டமாக 1700 பேருக்கு நியமனம் வழங்க உத்தரவிட்டார்.

அதேவேளை பிரதமரிடம் தொடர்ச்சியாக விடுத்த வேண்டுகோளின் பயனாக 5146 பேருக்கு நியமனம் வழங்க அனுமதி கிடைக்கப் பெற்றிருந்தது.

அதன் பிரதி பலனாக மாகாண சபைக்கு நிதியைக் கொண்டு வந்து சேர்ப்பித்து உடனடியாக 250 பேருக்கு நியமனம் வழங்கினோம்.

இவ்விடத்தில் 35 வயது கட்டுப்பாடு பல பட்டதாரிகளுக்கு நியமனத்தைத் தடை செய்திருந்தது. அதற்கும் பல முறை ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணத்திற்கென விசேட அனுமதி பெறப்பட்டிருந்தது.

அந்த உச்ச வயதெல்லை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மகாண வயது கடந்த பட்டதாரிகளுக்காக  45 ஆகவும் மாற்றப்பட்டது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் 45 வயதைக் கடந்து அரச தொழில் ஏதும் கிடைக்காத  72 பட்டதாரிகளும் உள்ளார்கள்.

சமீபத்தில் வழங்கப்பட்ட பட்டதாரிகளின் நியமனத்திலும் குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக பரவலாக குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.
பல்கலைக் கழகத்தில் பரீட்சைகள் எழுதி பல்கலைக் கழகத்தால் அங்கீகரித்த பட்டதாரிகள் ஏன் அலைக்கழிக்கப்பட வேண்டும்.

நமது நாட்டுப் பல்கலைக் கழகங்கள் தவறு விடுகின்றனவா அல்லது பரீட்சைகளில் தவறு உள்ளதா?  என்ற நியாயமான கேள்வி எழுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்கள் இப்பொழுது இடம்பெற்று வருகின்றது.

எந்தவொரு அபிவிருத்தியும் கடந்த இரண்டு மாதங்களாக கிழக்கு மாகாணத்தில் இல்லை. எல்லாமே முடக்கப்பட்டிருக்கின்றது. மாகாணத்தில் செய்து முடிக்கப்பட  வேண்டிய எத்தனையோ தேவைகள் உள்ளன.

நல்லாட்சியின் பெயரை சீர் குலைப்பதற்கும். இன உறவைச் சீர் குலைப்பதற்கும் ஏதுவாக பல கருமங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
நல்லாட்சியில் குளறுபடிகளுக்கு அனுமதிக்க முடியாது. அநீதிக்கு எதிராக நாம் குரல் கொடுப்போம்.

இதனை நல்லாட்சியின் நாயகர்களான ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திருக்கும் அறிவிக்க உள்ளேன்.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவால் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து ஆசிரியர் நியமனங்களில் தாம் புறக்கணிக்கப்பட்டதாகக்  கூறும் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 இற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 1749 பேர் நியமனமின்றிப் புறக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 

SHARE

Author: verified_user

0 Comments: