“ரணவிரு சேவா” அதிகார சபையினால் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள ரணவிரு குடும்பங்களுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் நிருமாணிக்கப்பட்டு வரும் 39 வீடுகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்து கொள்வதற்காக அதிகாரிகள் குழுவினர் புதன்கிழமையன்று 25.10.2017 மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் நேரில் கள விஜயம் மேற்கொண்டிருந்ததாக மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.“ரணவிரு சேவா” அதிகார சபையின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற பேராசிரியர் டொனால்ட் ஜயவர்தன, நிறைவேற்றுப் பணிப்பாளர்களான கமல்ஸ்ரீ, மற்றும் ஹேமச்சந்திர, மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரீ.எச். கீர்த்திகா ஜயவர்தன ஆகியோர் இந்தக் குழுவில் அடங்கியிருந்தனர்.
வாழைச்சேனை, ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை, வவுணதீவு மற்றும் மங்களகம ஆகிய இடங்களில் தலா 19 வீடுகள் தமிழ் முஸ்லிம் சமூக ரணவிரு குடும்பங்களுக்கும் 1 வீடு சிங்கள சமூக ரணவிரு குடும்பத்திற்கும் நிருமாணிக்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த இந்த வீடுகளை நிருமாணிக்கும் திட்டம் கடந்த ஜுன் மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வீட்டு நிருமாண வேலைகள் தற்போது நிறைவுறும் தறுவாயி;லுள்ளன. இவற்றை பயனாளிகளிடம் கையளிக்கும் ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காகவே அதிகாரிகள் இந்த நேரடி அவதானிப்பை மேற்கொண்டிருந்தனர்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழ்ந்த 136 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வரை இனங்காணப்பட்டுள்ளதாக கீர்த்திகா மேலும் தெரிவித்தார்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் “ரணவிரு சேவா” பயனாளிக் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டோருக்கான வீடமைப்புத் திட்டம் தற்போது அமுலாகிக் கொண்டிருக்கின்றது.
இவர்களுக்கான சேமநலன்களை “ரணவிரு சேவா” கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.
ரணவிரு குடும்பங்களின் சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கில் மேலும் தேவையுள்ள பயனாளிக் குடும்பங்களுக்கு வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கீர்த்திகா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment