19 Sept 2017

சிறுபான்மை சமூகம் ஆர்ப்பாட்டத்தில் பதாதை பிடிப்பதற்காக மட்டும் எம்பிக்களைத் தெரிவு செய்யாமல் ஆக்கபூர்வமான அறிவுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

SHARE
சிறுபான்மை சமூகம் ஆர்ப்பாட்டத்தில் பதாதை பிடிப்பதற்காக மட்டும் எம்பிக்களைத் தெரிவு செய்யாமல் ஆக்கபூர்வமான அறிவுள்ளவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அம்பாறை மாவட்டப் பொதுப் பணிகள் அமைப்பின் தலைவர் எஸ்.எல்.முனாஸ்
சிறுபான்மை சமூகங்களான தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர்காலத்தில் தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும்போது அறிவும், ஆற்றலும், ஆளுமையும், அர்ப்பணிப்பும் உள்ளவர்களைத் தெரிவுசெய்தால் அது வீட்டுக்கும் நாட்டுக்கும் நன்மையளிக்கும் என அம்பாறை மாவட்டப் பொதுப் பணிகள் அமைப்பின் தலைவரும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல். முனாஸ் தெரிவித்தார்.

அரசியல்வாதிகளின் சமகால நடவடிக்கைகள்பற்றி ஞாயிற்றுக்கிழமை 17.09.2017 ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த முனாஸ் மேலும் கூறியதாவது, தற்போது சிறுபான்மைச் சமூகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒரு சிலரின் நடவடிக்கைகளை நோக்கும்போது, வெட்கக் கேடாக உள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு சேர்ந்து பதாதை பிடிப்பவர்களாக மட்டுமே அவர்களைக் காண முடிகின்றது.

இதில் கேலிக்கும் கிண்டலுக்கும் உரிய விடயம் என்னவென்றால் மக்களின் நலனுக்காக அல்லாமல் ஊடகங்களில் பணியாற்றும் ஒரு சிலரின் நிகழ்ச்சி நிரலுக்காக இவர்கள் இயங்குகிறார்கள்.

நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் தலைப்பில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து அந்த இடத்திற்குப் போய் நின்று பதாதையைப் பிடித்துக் கொண்டு கூக்குரல் எழுப்புகிறார்கள்.

ஆனால், நாடாளுமன்றக் கூட்டங்களில் நாட்டு நடப்புக்கள் பற்றியும் மக்களின் அபிவிருத்தி பற்றியும் தீர்மானம் எடுக்கும்பொழுது இவர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பதில்லை.
நாடாளுமன்றத்திற்கும் அரசாங்க மேல் மட்ட அதிகாரிகளுக்கும் மக்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்வதற்கு இவர்களுக்கு மாற்று மொழி ஆற்றலும் இல்லை, அதிகாரிகளிடத்தில் அலுவல்களை முடிக்கக் கூடிய ஆளுமையும் இல்லை.

அடுத்த தேர்தலில் அப்பாவி மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக இவர்கள் வெறுமனே ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்கின்றார்கள்.

மக்கள் அடுத்த தேர்தலிலும் இதே வழிமுறையைக் கடைப்பிடித்து  இத்தகைய அறிவும் ஆற்றலும், ஆளுமையும் இல்லாதவர்களைத் தெரிவு செய்து இனிமேலும் தவறிழைத்து விடக் கூடாது.

நாட்டு நடப்புக்களையும், சட்டதிட்டங்களையும், பன்மொழி ஆற்றலையும் கொண்ட ஆளுமையுள்ள அறிவாளிகளை மக்கள் தெரிவு செய்தால் அதன் மூலமாக மக்களுக்கு அதிக நன்மை உண்டாகும். சமூகங்களுக்கிடையில் அமைதியும் நிலவும்.

SHARE

Author: verified_user

0 Comments: