21 Aug 2017

“எடுத்தேன் கவிழ்த்தேன் அரசியல் விமோசனம் அளிக்காது” நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்

SHARE
“எடுத்தேன்  கவிழ்த்தேன்” என்று உசார் மடையர்களாகி அரசியல் செய்வது பாதிக்கப்பட்டுப் போயுள்ள சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஒருபோதும் விமோசனம் பெற்றுத் தராது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

சமகால அரசியலில் முன்னெடுக்கப்பட வேண்டிய தூரநோக்குச் சிந்தனைகள் பற்றி அவர் திங்கட்கிழமை 21.08.2017 ஊடகங்களுக்காக கருத்து வெளியிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்@ சிறுபான்மைச் சமூகங்களான தமிழரும் முஸ்லிம்களும் ஒற்றுமையாய்ச் செயற்பட்டு ஒருமித்து உரிமைகளைப் பெறுவதைத் தடுப்பதற்காக பல சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல்கள் சூட்சுமமான முறையில் கையாளப்பட்டு வருவதை தூரநோக்குச் சிந்தனையாளர்கள் உற்றுக் கவனித்துப் பார்க்க வேண்டும்.

கடந்த கால யுத்தத்தினால் சிறுபான்மை இனங்கள் திட்டமிட்டு வேண்டுமென்று சீரழிக்கப்பட்டன.

இப்பொழுது யுத்தம் முடிவடைந்த பின்னரும் இவ்விரு சிறுபான்மைச் சமூகங்களையும் முட்டி மோதவிட்டு சீரழித்து சின்னாபின்னமாக்குவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்த விடயங்களை உற்றுக் கவனிக்காமல் வேறு எங்கிருந்தோ திட்டமிடப்படும் சூழ்ச்சி வலைகளில் சிக்கி உசாரடைந்து இனவாதிகளின் பின்னால் ஓடுப்பட்டுத் திரியக் கூடாது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இனங்களுக்கு எரியும் நெருப்பாக எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன.

அதேநேரம், இந்தப் பிரச்சினைகளில் இன்னும் இன்னும் எண்ணெய் வார்த்து எரிய வைப்பதற்கு எத்தனையோ குழப்பவாதிகள் திட்டம் வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்பொழுது திடீரென நமக்காகப் பரிந்து பேச எத்தனிக்கும் நபர்களின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் ஏன் இவ்வளவு ஆர்வமாகவுள்ளார்கள் என்பது பற்றியும் நாம் கவனமாகச் சிந்திக்க வேண்டும்.

இலங்கைச் சிறுபான்மைச் சமூகங்கள் இலங்கையின் வரலாற்றில் எத்தனையோ ஈடு செய்ய முடியாத இழப்புக்களைச் சந்தித்தவர்கள் என்பதை மனத்தில் இருத்தி எதிர்கால நடவடிக்கைகளை இணக்கப்பாட்டோடு முன்னெடுக்க வேண்டும்.

நிதானமில்லாத ஆர்ப்பரிப்புக்களால் அழிவுகள்தான் மிஞ்சும். பக்குவமில்லாத அரசியல் விமர்சனங்களும், பண்புகளற்ற நடவடிக்கைகளும் இனத்துவேசத்தைக் கிளறி விடும் செயற்பாடுகளும் ஈனச் செயல்களாகவே கணிப்பிடப்படும்.

கடந்த காலத்தில் பலமாக உருவெடுத்து, பல பாரிய வெற்றிகளைப் பெற்ற தமிழர் உரிமைப் போராட்ட இயக்கங்களைப் பிளவுபடுத்துவதற்கான சதித் திட்டம் தீட்டப்பட்டு தமிழர் பலம் குறைக்கப்பட்டது, பேரினவாதம் வெற்றி கண்டது. 

அதனால் இப்பொழுது நாம் மீண்டும் அடிமட்டத்திற்கு வந்துள்ளோம்.
ஆயுதப்போராட்டச் சக்தி மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் பலமான ஜனநாயக சக்தியாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளது.

அந்த சக்தியினை நேரடியாகவும், மறைமுகமாகவும் பலவீனப்படுத்துவதற்காக பல கெடுபிடிகளும் நெருக்கடிகளும் தரப்படுகின்றன.

பேரினவாத சமூகத்தின் மத்தியில் வாழும் தமிழர்களும், முஸ்லிம்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் ஐக்கியப்படுவதற்கு பல தடைகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் கையாளப்படுகின்றன.

ஊடகர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் ஒரு சிலர்  தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பலமான விடயங்களை மறைத்தும், பலவீனர்களின் விடயத்தினை நிறைத்தும் காட்ட முற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

பேரினவாதிகளையும், அவர்களது எடுபிடி முகவர்களையும் இனங்கண்டு அவர்களது சதிவலையிற் சிக்காமல் சிறுபான்மை இனங்கள் வெற்றியடைய வேண்டும்.”

SHARE

Author: verified_user

0 Comments: