14 Sept 2016

பொலிஸாருக்கு தகவல்களை வழங்குவதன் மூலம் கொலையாளிகளைக் கண்டு பிடிக்க உதவலாம் பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட்

SHARE
கொலையாளிகளைக் கண்டு பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்று பொலிஸாரைக் குறை கூறிக் கொண்டிருக்காமல் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த அனைத்து தகவல்களையும்
அச்சமின்றி முன்வந்து பொலிஸாருக்கு வழங்குவதன் மூலம் விரைவாக குற்றவாளிகளை நீதி விசாரணையின் முன்னால் கொண்டு வந்து நிறுத்த முடியும் என ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.

ஏறாவூரில் கடந்த ஞாயிறன்று அதிகாலை வேளையில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகளினது ஜனாஸாக்கள் ஏறாவூர் காட்டுப்பள்ளிவாயலில் செவ்வாய்க்கிழமை இரவு நல்லடக்கம் செய்யப்பட்டதன் பின்னர் கொலையைக் கண்டிக்கும் விழிப்புணர்வு நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

தொடர்ந்து அங்கு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஷயீட்@ படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளான தாய் மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு சொர்க்கலோக வாழ்வு சௌபாக்கியம் நிறைந்ததாக அமைந்து விட வேண்டும் என்று நாங்கள் இந்த துயர வேளையிலே உள்ளம் உருகி இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

இழப்புக்களைச் சந்தித்த அன்னார்களது குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருளும் மன அமைதியும் கிட்ட வேண்டும்.

கணவனை இழந்த தாயும் தந்தையை இழந்த மகளும் மிருக வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டிருப்பதனை ஈவிரக்கமுள்ள அனைத்து உள்ளங்களும் கண்டிக்கின்றன.

தியாகத் திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை எதிர்பார்த்திருந்த நமக்கு இந்த இரு ஜீவன்களும் படுகொலையாளிகளின் கைகளில் சிக்கி தங்களைத் தியாகம் செய்து கொண்டு நம்மை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்கள்.
அதனால் எதிர்பாராத சோகத்தில் இந்த ஊர் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. சகித்துக் கொள்ள முடியாத இந்த வேளையிலே உள்ளக் குமுறலுடன் இருக்கின்றோம்.

கொலையாளிகளைக் கண்டு பிடித்து அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று அவாவுறுகின்றோம்.

இதற்கு பொதுமக்கள் பார்வையாளர்களாக இல்லாமல் அநீதியைக் கண்டிப்பதிலும், அவற்றைத் தடுத்து நிறுத்துவதிலும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

பொலிஸார் இந்த விடயத்திலே தங்களை முழுமையாக அர்ப்பணித்து  இரவு பகல் என்று பாராது உணவு, தூக்கம் இன்றிக் கூட எவ்வாறேனும் கொலையாளிகளைக் கண்டு பிடித்து விட வேண்டும் என்பதில் மிகக் கவனம் எடுத்துச்  செயற்படுகின்றார்கள். அவர்களை நாம் மனதாரப் பாராட்டுகின்றோம்.
பொலிஸார் வெகுவிரைவில் இந்தக் கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவார்கள் என்கின்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.

அதேவேளை இந்த விடயத்தில் பொதுமக்களுக்கும் ஒரு கடமை இருக்கின்றது. எங்களால் என்னென்ன தகவல்களை பொலிஸாருக்கு வழங்க முடியுமோ அவற்றை நேரடியாவோ, அன்றேல் மறைமுகமாகவே, இல்லாவிட்டால் அநாமதேயமாகவோ தெரிவிக்க முன்வரவேண்டும்.

தடயங்கள், தகவல்களைப் பொலிஸாருக்கு வழங்க வேண்டும், பொலிஸாரிடம் சொல்வதற்கு அச்சமிருந்தால் அதனை பள்ளிவாசல் சம்மேளனத்திற்கூடாகவும் தெரியப்படுத்தலாம்.

படுகொலைகளை இனிமேலும் இடம்பெறாமற் செய்ய வேண்டுமானால் நாமனைவரும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஒரு வீட்டுக்கு அதனைச் சுற்றியுள்ள வீட்டுக் காரர்களே பாதுகாப்பாக இருக்க வேண்டும். தகவல்களையோ அல்லது தடயங்களையோ தெரியப்படுத்தினால் நீதி மன்றம் செல்ல வேண்டி வருமே என்ற அச்சத்தை விட்டுப் பொதுமக்கள் விலகி அநீதியைக் கண்டிக்கவும் அதனைத் தடுக்கவும் துணிய வேண்டும். என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: