சமூக சந்தைப்படுத்தல்' திட்டத்தின் மூலம் 4,000 இளைஞர், யுவதிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க முடியும் என கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் சமூக சந்தைப்படுத்தல் திட்ட முகாமையாளர் செல்வி ஜுடி தீபன் தெரிவித்தார்.
கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சமூக சந்தைப்படுத்தல் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயற்பாடு, மட்டக்களப்பு சன்றைஸ் ஹோட்டலில் புதன்கிழமை (29) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, விசேட தேவையுடைய, பெண் தலைமைத்துவக் குடும்பங்களில் தொழில் இல்லாத இளைஞர், யுவதிகளுக்கு 04 துறைகளில் சமூக சந்தைப்படுத்தல் திட்டத்தின் மூலம் தொழிற் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
கட்டுமானம், சுற்றுலாத்துறை, தகவல்த் தொழில்நுட்பம், மோட்டார் வாகனம் திருத்துதல் ஆகியவற்றுக்காக 16 வயது முதல் 29 வயது வரையான இளைஞர், யுவதிகள் உள்வாங்கப்படவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் சர்வோதய பயிற்சி நிலையம், பாசிக்குடா ஹோட்டல், விவேகானந்தா தொழிற்பயிற்சி நிலையம், சென். ஜோன்ஸ் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடமாகாணம், கிழக்கு மாகாணம், வடமேல் மாகாணம், தென்மாகாணம் ஆகியவற்றிலிருந்து 1,000 பேர் படி இதற்காக தெரிவுசெய்யப்படவுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் 40 சதவீதமான பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கமுடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.
0 Comments:
Post a Comment