3 May 2016

கிழக்கு மாகாணத்தில் தேசியப் பாடசாலைகள் 12 மணிக்கு மூடப்படவில்லை. மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர்கள் மத்தியில் அதிருப்தி

SHARE
கிழக்கு மாகாணத்தில் உள்ள தேசியப் பாடசாலைகள் 12 மணிக்கு மூடுவதற்கு வலயக் கல்வி அதிகாரி;கள் அனுமதிக்காததால் மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
இயற்கைச் சீற்றம் மாகாண நிருவாகத்திலுள்ள இடங்களுக்கு வேறாகவும் மத்திய அரசின் நிருவாகத்திற்கு வேறாகவும் உள்ளதா என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தற்போது நிலவுகின்ற கடும் வெப்பமான காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை மாணவர்கள்; ஆசிரியரகள்; அதிபர்களினதும் நலன் கருதி செவ்வாய்க்கிழமை 03.05.2016 தொடக்கம் வெள்ளிக்கிழமை 06.05.2016 வரை நண்பகல் 12 மணியுடன் மூடுவதாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சு அறிவித்தது

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் திங்கட்கிழமை (02) வலயக் கல்விப் பணிப்பாளர்களுடன் கல்வி அபிவிருத்திக் கூட்டம் நடைபெற்றது. இதன்போது, வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளை நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு  மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாமுக்கு அம்மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி பணித்திருந்தார்.

இதன்படி செவ்வாய்க்கிழமை மாகாண நிருவாகத்தின் கீழுள்ள சகல பாடசாலைகளும் நண்பகல் 12 மணிக்கு மூடப்பட்ட அதேவேளை மத்திய அரசின் நிருவாகத்திலுள்ள தேசியப் பாடசாலைகள் மேற்குறித்த பணிப்புரைக்கு அமைவாக நேரகாலத்துடன் மூடப்படவில்லை. அவை வழமை போன்று இயங்கின.

எனினும், தகிக்கும் வெயிலுக்கு மத்தியில் இந்த விடயம் மாணவர்கள் ஆசிரியர்கள் அதிபர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வாழைச்சேனையில் ஒரே வளவிற்குள்; அமைந்துள்ள மாகாணப் பாடசாலை நேர காலத்துடன் கலைக்கப்பட அந்த வளவிற்குள் உள்ள மற்றொரு தேசியப் பாடசாலை கொதிக்கும் உஷ்ணத்திற்கு மத்தியில் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது கொடுமை என்கின்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதிகார மட்டத்தில் இந்த விடயம் கவனத்திற்கொள்ளப்படும் என்று மாகாண சபை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: