23 Sept 2015

அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் செயற்பாடு வரவேற்கத்தக்கது – அரசாங்க அதிபர்

SHARE
அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கம் ஏற்பாடு செய்த மாவட்ட அரசாங்க அதிபர் துசித்த பி. வணிகசிங்கவை கௌரவிக்கும் நிகழ்வு (22) பகல் 11.30மணிக்கு அக்கரைப்பற்று ஏசியன் செப் ஹோட்டலில் நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் கே.எம்.கபீர் தலைமைதாங்கி உரையாற்றினார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும், அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் விளக்கினார். அதனை தொடர்ந்து அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தினால்  அரசாங்க அதிபர் துசித்த பி. வணிகசிங்கவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌர விக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய அரசாங்க அதிபர் துசித்த பி வணிகசிங்க,
கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதிலும் பாரிய பங்களிப்பினைஅபிவிருத்தி உத்தியோகத்தர்களால் செய்ய முடியும்.

மூவின மக்கள் வாழும் அம்பாரை மாவட்டத்தில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், பரஸ்பர புரிந்துணர்வையும் ஏறபடுத்துவதோடு, நிரந்தர சமாதானத்தினூடாக சுபீட்சமுள்ள மூவின சமூகத்தையும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் உருவாக்கமுடியும் எனத் தெரிவித்தார். அம்பாரை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார்சைக்கில் இன்னும் வழங்கப்படாமையை சங்கத்தின் தலைவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கு விளக்கமளித்த அரசாங்க அதிபர், பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் இரண்டு தினங்களுக்கு முன்னர் என்னை தொடர்பு கொண்டு அறிக்கை கேட்டிருந்தார். துற்போது எனது அலுவலகத்தில் அதற்கான வேலை நடைபெறுவதாக கூறினார். உங்கள் செயற்பாடு வரவேற்கத்தக்கது. எதிர்காலத்தில் எம்மோடு இணைந்து இந்த மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய நீங்கள் எல்லோரும் முன்வரவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார்.

அரசாங்க அதிபர் துசித்த பி வணிகசிங்க அவார்கள் உரையை தொடர்ந்து சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும் அரசாங்க அதிபர் திறந்து வைத்தார். 
நிகழ்வில் பிரதேச மட்டத்தில் பணியாற்றும் தொழிற்சங்க இணைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களும் வழங்கப்பட்டன. தொழிற் சங்கத்தின் கௌரவ செயலாளர் எஸ்.ஆப்தீன் அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார். அம்பாரை மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கத்தின் ஊடக இணைப்பாளரும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளருமான ஏ.எல்.எம்.ஸினாஸ் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். மதிய போசன உபசாரத்துடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. 














SHARE

Author: verified_user

0 Comments: