1 Sept 2015

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஸ்தாபிக்கப்பட வேண்டும்

SHARE

சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய உத்தரவாதம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என, கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை (2015-08-31) பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்றது. 

இதில் பொது விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்களது கருத்துரையின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் பேசுகையில், 

“நடந்து முடிந்த பொதுத் தேர்தல் பிரச்சாரத்திற்காக கல்முனைக்கு வருகை தந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது உரையின்போது அடுத்த அரசாங்கத்தில் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். 

சாய்ந்தமருது மக்களின் 25 வருட கால அபிலாஷையான அந்த உள்ளுராட்சி சபையை அவர் வாக்களித்தவாறு பிரகடனப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நான் இந்த மாநகர சபையில் கோரிக்கை விடுக்கின்றேன். 

அதுபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கல்முனை பிரச்சாரக் கூட்டத்தில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் வரை புகையிரத சேவை விஸ்தரிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். அதனையும் நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இப்பிராந்திய சமூகங்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்று குறிப்பிட்டார். 

இந்த சபை அமர்வில் மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஷீர், எம்.ஜெயக்குமார், ஏ.கமலதாசன், ஏ.ஆர்.அமீர், எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.எம்.றக்கீப், ஏ.எச்.எச்.ஏ.நபார், இசட்.ஏ.எச்.ரஹ்மான், எம்.எஸ்.உமர் அலி, ஏ.எல்.எம்.முஸ்தபா, ஆகியோரும் உரையாற்றினர். 

கல்முனை மாநகர முதல்வர்- சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளதால் குறித்த சபை அமர்வு பிரதி முதல்வர் அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 
SHARE

Author: verified_user

0 Comments: