புலிகளினால் சிறைவைக்கப்பட்டிருந்த எனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை என காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம், தேற்றாத்தீவைச் சேர்ந்த பெரியதம்பி தேவப்போடி என்ற குடும்பஸ்தர் தெரிவித்தார்.
காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வு ஞாயிற்றுக்கிழமை (23), மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார்.
அப்போது அவரை 7.2.2005ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் கைது செய்து சிறையில் வைத்திருந்தனர். அவரை விடுதலை செய்யுமாறு கேட்டு பலரிடமும் சென்றேன். புலிகளின் சிறைக்கு சுமார் 15 தடவைகள் சென்று எனது மகனை நான் பார்வையிட்டேன். எனது மகனை எதற்காக அவர்கள் கைது செய்தனர் என்ற காரணம் தெரியாது. மகனை விடுவிப்பதற்கு தாங்கள் தயார் எனவும் அப்போதைய புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் மகனை ஒப்படைப்பதாக அவ்வியக்கத்தினர் கூறினர்.
அப்போது நான் அந்த பிரதேச செயலாளரிடம் சென்று எனது மகனை விடுவித்து தாருங்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர் மட்டக்களப்பானை எனக்கு எடுக்க முடியாது எனக் கூறினார். பின்னர், கிபீர் விமானங்கள் நடத்திய தாக்குலில் புலிகளின் சிறை உடைக்கப்பட்டதாகவும் அங்கு புலிகளினால் சிறை வைக்கப்பட்டிருந்தவர்கள் தப்பியோடி இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் அறிந்தேன்.
எனது மகன் எங்காவது இருப்பார். அவரை தேடிக்கண்டுபிடித்து தாருங்கள். நான் பலரிடமும் சென்று விட்டேன். ஆனால், எனக்கு எனது மகனைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் அரசாங்க உத்தியோகத்தர் என்பதால் அவரின் சம்பளம் இன்றும் கிடைக்கின்றது. அதன்மூலம் தான் நாங்கள் குடும்ப ஜீவியம் நடத்துகிறோம்' என்று அந்த தந்தை மேலும் கூறினார்
0 Comments:
Post a Comment