காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற கலவரத்துக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
காத்தான்குடி கயா பேக்கரி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் தகவல் வெளியானதையடுத்து மகிழச்சியடைந்த காத்தான்குடி மக்கள் பட்டாசுகளை வெடிக்க வைத்து தமது மகிழச்சியை வெளிப்படுத்தினரே தவிர யாரையும் தாக்கி வன்முறையில் ஈடுபடவில்லை.
இவ்வாறு பட்டாசுகளை வீதியில் வெடிக்க வைத்த போது பட்டாசுகளை வெடிக்க வைத்தவர்கள் மீது தாக்கியுள்ளனர்.இதனால் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் காயமடைந்தனர்.
வீதியில் சென்ற ஆதரவாளர்களை பள்ளிவாயலுக்குள் பிடித்து கட்டி வைத்து அடித்து காயப்படுத்தியுள்ளனர்.அவர்கள் மயக்கமடைந்த நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளனர்.அதன் புகைப்படமும் எம்மிடம் இருக்கின்றது.
இந்தச் சம்பவத்தை ஹிஸ்புல்லாஹ்வின் மீது சாட்டி முன்னாள் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் பயங்கரவாதியாக காட்டுவதற்கு முயற்சிகளை இவர்கள் செய்து வருகின்றனர் என்றார்.
மேலும்,காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய சந்தியிலுள்ள ஹோட்டல் கடைக்குள் இருந்து வெற்று போத்தல்கள் மக்களை நோக்கி வீசப்பட்டுள்ளன. இதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.
அந்த போத்தல் வீச்சினால் பலர் காயமடைந்துள்ளனர்.
தனிப்பட்ட ரீதியில் இரண்டு பெண்களுக்கிடையில் இடம்பெற்ற சண்டையை இதில் சம்பந்தப்படுத்தி பேசுகின்றனர். அதே போன்று தாருள் அதர் பள்ளிவாயல் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் பொய்யான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment