29 Jul 2015

நான் நாடாளுமன்றம் சென்றால் ஹக்கீம் வீடு செல்லத் தயாரா? VC இஸ்மாயில் சவால்

SHARE

நான் பாராளுமன்றம் சென்றால் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வீடு செல்லத் தயாரா என தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளருமான பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் சவால் விடுத்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்வேன் என்பது உறுதியாகி விட்டது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களும் கருத்து வெளியிட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பேராசிரியர் இஸ்மாயில் தேர்தலில் வெற்றி பெற்றாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது எனவும் அவர் பாராளுமன்றம் சென்றால் தனது காதை அறுப்பேன் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் திங்கட்கிழமை அட்டாளைச்சேனை பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
“இந்த மாவட்ட மக்களின் நாடித் துடிப்பை நேற்று நேரடியாக வந்து பார்த்து விட்டே அவர் இந்த கருத்துக்களை தெரிவிக்கிறார். எனது வெற்றியினை முறியடிக்க அவர் கடும் பிரயத்தனமும் எடுத்து வருகிறார். அதன் பின்னணியிலேயே நான் வென்றாலும் பாராளுமன்றம் செல்ல முடியாது என்கின்ற புதுக்கதையினை அவர் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துள்ளார்.
அவ்வாறாயின் நான் பாராளுமன்றம் சென்றால் ஹக்கீம் தனது அரசியல் பதவிகளைத் துறந்து வீடு செல்லத் தயாரா என்று நான் சவால் விடுக்க விரும்புகிறேன்.
கடந்த சனிக்கிழமை சம்மாந்துறையில் இடம்பெற்ற மாபெரும் கூட்டத்துடன் எமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஹக்கீம் தேவையற்ற வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றார்.
சட்டத்துறையில் முதுமாணி பட்டம் பெற்றுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீம் நான் சட்ட ரீதியற்ற முறையில் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அவர் நீதிமன்றம் செல்ல முடியும். நானும் அதற்கு தயாரகவுள்ளேன். ஆனால் நீதிமன்றம் செல்லாமல் மேடைகளில் பேசி மக்களை குழப்புகிறார். இதன் மூலம் வீண் வதந்திகளை பரப்பி மக்கள் காங்கிரஸிற்கு அம்பாறை மாவட்ட மக்கள் வாக்களிப்பதனை தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றார்.
இந்த வதந்தியினை அம்பாறை மாவட்ட மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். ஆனால் இவரது இந்த உரை மூலம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒரு ஆசனம் பெறுவதும் நான் பாராளுமன்றம் செல்வதும் உறுதியாகி விட்டதையே பறைசாற்றுகிறது” என்றும் தெரிவித்தார்
SHARE

Author: verified_user

1 Comments:

Shiva Sampanthan said...

நேர்மையான ஒரு தலைவன், அபிவிருத்தியின் அர்த்தத்தை மட்டக்களப்பிற்கு காட்டியவர் எங்கள் ஐயா முன்னாள் பிரதி அமைச்சர் கணேசமூர்த்தி. ஒருவருட காலத்துக்குள் எத்தனை அபிவிருத்தி எத்தனை வேலைவாய்ப்புக்கள். அவருக்குத்தான் எங்கள் வாக்கு, நாம் நன்றிக்கடன் மறக்கமாட்டோம். அவரை பாராளுமண்றத்துக்கு அனுப்பாமல் விட்டால் அது நாம் மட்டக்களப்பு மக்களின் தலையில் மண்ணை அள்ளி வாருவதற்கு சமனான ஒரு செயல்.
அதிகாரப்பகிர்வின் போது எமது அபிவிருத்தியின் நாயகன் அமைச்சரவையில் இருக்கச் செய்வோம்.
www.ganeshamoorthy.com

www.facebook.com/pages/Somasuntharam-Ganeshamoorthy/863770150338624