29 Jul 2015

சரித்திர ரீதியாக வாழ்ந்த மக்கள் சுயாட்சி பெற உரித்துடையவர்கள்

SHARE

பல்வேறு இனங்கள், பல்வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்ற நாடுகளில் இருக்கின்ற ஆட்சி முறைகள் சம்பந்தமான ஒழுங்குகளின் அடிப்படையில், இறைமை பகிர்ந்தளிக்கப்பட்டு, வட, கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் அவர்கள் பூரண சுயாட்சியைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 


சாவகச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வேட்பாளர் அருந்தவபாலனுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 




அவர் மேலும் கூறியதாவது, 



எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் நாங்கள் எமது மக்கள் தொடர்பான சகல பிரச்சினைகளையும் கூறியிருக்கின்றோம். 



மீள்குடியேற்றம், இராணுவ மயமாக்கலை இல்லாமல் செய்தல், காணிகள் தொடர்பான பிரச்சினைகள், கைதிகள் சம்பந்தமான பிரச்சினைகள், விதவைகள் சம்பந்தமான பிரச்சினைகள், போராளிகள் சம்பந்தமான பிரச்சினைகள் என பல்வேறு விடயங்களைக் குறிப்பிட்டுள்ளோம். 



முக்கியமாக அரசியல் தொடர்பான பிரச்சினைகளை ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தங்களின் அடிப்படையில் தெரிவித்துள்ளோம். 



நாங்கள் ஒரு தனித்துவமான இனம். தேசிய இனம். எமக்கு ஒரு கலையுண்டு, பண்பாடுண்டு. 



ஐக்கிய நாடுகள் சபையின் குடியியல் சம்பந்தமான ஒப்பந்தத்தில், ஒரு தனிப்பட்ட மக்களுக்கு சுயநிர்ணய உரிமைகளுக்கு உரித்துண்டு. 



அதனடிப்படையில் தான் எமது தேர்தல் பிரசாரம் அமைந்துள்ளது. ஒருமித்த நாட்டுக்குள் பிளவு ஏற்படாமல், அதிகாரம் எங்களுக்கு முழுமையாக பகிந்தளிக்கப்படல் வேண்டும். 



தேசிய பாதுகாப்பு, வெளிவிவகாரம், நாணயம் தவிந்த அதிகாரங்கள் எங்களுக்குப் பகிர்தளிக்கப்பட வேண்டும். அவ்வாறானதொரு காலம் வந்துகொண்டிருக்கிறது எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார். 
SHARE

Author: verified_user

0 Comments: